'வீரத்தமிழ் மண்ணாம் திராய்க்கேணியை சிவந்த மண்ணாக்கிய சக்திகள் இன்று திராய்க்கேணியை சூறையாடத்தலைப்பட்டுள்ளனர். அதற்கு ஒருபோதும் அனுமதியோம்.'
இவ்வாறு திராய்க்கேணியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல வேட்பாளர் கலாநிதி செல்வராஜா கணேஸை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் கட்சியின் மாவட்ட பேச்சாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.
குறித்த கூட்டம் நேற்று திராய்க்கேணியில் த.தே.கூட்டமைப்பு பிரமுகர் சட்டமானி அருள்.நிதான்சன் தலைமையில் நடைபெற்றது.
அங்கு பேச்சாளர் ஜெயசிறில்மேலும் உரையாற்றியதாவது:
அம்பாறை மாவட்டத்தில் 52தமிழ்க்கிராமங்கள் இருந்தன. இன்று அது 41ஆகக்குறைந்துள்ளன. அந்த அத்தனை கிராமங்களையும் தின்றுகைகழுவிய கூட்டம் இன்று எல்லைகளிருக்கும் குக்கிராமங்களை சூறையாட கங்கணம் கட்டியுள்ளது.
அண்மையில் இக்கிராமத்துஇரு தமிழ் யுவதிகளை நிவாரணம் தருவதாக அழைத்து ஒரு பைலைக் கொடுத்து முஸ்லிம் காங்கிரசில் இணைந்ததாக பாரிய பொய்யை முன்னாள் இராஜாங்கஅமைச்சர் பைசால்காசிம் ஊடகங்களுக்கு முன் கூறியுள்ளார். ஏன் இந்த பித்தலாட்டம்?
முஸ்லிம் காங்கிரசுக்கு இப்படி ஏமாற்றி பொய் சொல்லி ஆட்சேர்க்கும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளதா? என எண்ணிப்பார்க்கவேண்டியுள்ளது.
இன்று அரசின் ஏஜண்டுகள் தொழில்தருகிறோம் அபிவிருத்தி செய்கிறோம் என்றுகூறிக்கொண்டு தமிழ்க்கிராமங்களுள் நுழைகிறார்கள். அதற்கு சில தமிழ்ப் புல்லுருவிகள் துணை போகின்றார்கள். சன்மானங்களுக்கான தரகர்கள். இவ்வளவு நாளும் கண்ணுக்குத் தெரியாத தமிழ் இளைஞர்கள் யுவதிகள் தற்போதுதான் தெரிகின்றார்கள் அவர்களுக்கு.
இதுவரை யாருக்கு இவர்கள் தொழில் கொடுத்துள்ளார்கள். சிறியாணி என்பவருடன் திரிபவர்கள் பல அபிவிருத்திகளை செய்து தருவதாகவும் தொழில் பெற்றுத் தருவதாகவும் படிவங்கள் விநியோகிக்கிறார்களாம். இவ்வளவு கதைக்கும் அவர் இதுவரை அந்தப்பெரிய காரைதீவுக்கு ஒதுக்கியது ஆக 20ஆயிரம் ருபா மட்டுமே. இன்னமும் இவர்களை நம்புகிறீர்களா?
அவர்களை இனங்கண்டு விரட்டியடிக்கவேண்டும். அவர்கள் தமிழ் விரோதிகள் அல்ல துரோகிகள் என தமது உரையில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment