தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் வைத்தியசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த வேளையிலேயே இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்ற போதிலும் உறவினர்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அறிவித்துள்ளனர். இவர் கடந்த திங்கள் கிழமை திடீர் சுகயீனம் காரணமாக அநுராதபுரம் கட்டியாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கட்டியாவ வைத்தியசாலை நிர்வாகம் அவரை தம்புத்தேகம வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றியுள்ளது.
தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோயாளர் தங்குமிட அறையிலிருந்து மலசலகூடத்திற்கு சென்று அங்கிருந்த யன்னல் வழியாக பாய்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றுக்கு தப்பியோட முயற்சித்த வேளையில், பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர்.
அது மாத்திரமின்றி பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகளுக்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடுவதற்கே அவர் முயற்சித்துள்ளார்.
இதன்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதோடு அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தப்பிச்சென்ற நோயாளர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று காலையில் குறித்த நபரின் சடலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்திற்குள்ளிருந்து மீட்க்கப்பட்டுள்ளது.
54 வயதுடைய குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment